<p>அரியலூர்: அரியலூர், ஜெயங்கொண்டம் காவல் சரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1,300 கிலோ புகையிலை பொருட்கள் குழியில் போட்டு அழிக்கப்பட்டது.</p><p>ஜெயங்கொண்டம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், கரடிகுளம், சின்ன வளையம், புதுக்குடி, செங்குந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தற்போது அந்த புகையிலைப் பொருட்களை அழிக்கும் விதமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் 1,300 கிலோ பல லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. புதுக்குடி கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி, புகையிலை பொருட்களை மீண்டும் யாரும் பயன்படுத்திவிட கூடாது என்பதற்காக அதன் மீது ப்ளீச்சிங் பவுடரை கொட்டி அழித்தனர். இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கில் 10 டன் புகையிலை பொருட்கள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டன.</p>
