<p>காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 74 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளையும், ரூ. 55 லட்சத்தில் புதிய மக்கள் நலத்திட்ட பணிகளையும் எம்.எல்.ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்.</p><p>காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது காஞ்சிபுரத்தில் குடியிருப்புகள் அதிகரித்து வருவதாலும், அடுத்து வருவது கோடைகாலம் என்பதாலும் மின் தேவையை கருத்தில்கொண்டு மூன்று இடங்களில் புதிய மின்மாற்றிகளை ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.</p><p>அதேபோல் ஒலி முகமது பேட்டையில் ரூ.18.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை, ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி ஆகியவற்றை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, 10வது வார்டு பகுதியில் ரூ.15.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் மாணவர்களின் நலன் கருதி 22வது வார்டு பகுதியில் மாவட்ட அறிவுசார் மைய வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் படிப்பு மண்டபம் (Study Hall) அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.</p>
