<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த மணல்மேடு அருகே அதிவேகமாக வந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. </p><p>பொள்ளாச்சி ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் நேற்று மாலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென நிலை தடுமாறி வலது புறம் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. பின்னர் காரில் இருந்த ஓட்டுநர் தலைக்கேறிய போதையில் வெளியேறி சாலையோரத்தில் விழுந்து குறட்டை விட்டு தூங்கி விட்டார். </p><p>பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் சாலையோரம் கவிழ்ந்து இருந்த காரை கிரேன் மூலம் மீட்டு கோட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பதும், இவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. </p><p>மேலும், ஓட்டுநர் ரமேஷ் குமார் மது போதை தெளிந்த உடன் தனது காரை காணவில்லை என கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
