<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே பிறந்து ஐந்து நாட்களே ஆன குட்டியுடன் சாலையில் உலா வந்த யானைக் கூட்டத்தைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து வீடியோ எடுத்தனர்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆழியார் வால்பாறை போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் அடிக்கடி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.</p><p>இந்த நிலையில் நேற்று மாலை ஆழியார் சம மட்ட கால்வாய் வால்பாறை சாலையின் ஓரத்தில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 யானைகள் இருந்த கூட்டம் திடீரென ஆழியார் வால்பாறை சாலையில் அணைப் பகுதிக்கு தண்ணீர் குடிக்க பிறந்து ஐந்து நாட்கள் ஆன குட்டியுடன் வந்தன. இதனை பார்த்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.</p><p>இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், "கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி பொதுமக்கள் பயணிக்கக் கூடிய சாலையில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இவ்வழியாக செல்லுபவர்கள் கவனமாக செல்ல வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர்.</p>
