<p>தூத்துக்குடி: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.</p><p>சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ”தற்போதைய திமுக ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே, மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியே தொடரும்" என்றார்.</p><p>ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட போது, “ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரன், பாஜக தலைவர்கள் என அனைவருமே அவமானப்படுத்தினார்கள். தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஓபிஎஸ்ஸை கௌரவமாக வைத்துள்ளார்" எனக் கூறினார்.</p><p>தொடர்ந்து, தூத்துக்குடி கொலை சம்பவம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கிறேன்” என கூறினார்.</p><p>முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில், வேடநத்தம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p>
