<p>சென்னை: துரைப்பாக்கத்தில் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக 200 வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி துரைப்பாக்கம் 193 வது வார்டு அறிஞர் அண்ணா நகர் 8-வது தெரு பகுதியில், 'எங்களுக்கு உதவாத கட்சிகள் ஓட்டு கேட்டு உள்ளே வர வேண்டாம்; ஓட்டளிக்க விருப்பம் இல்லை' என அப்பகுதி பொதுமக்கள் சார்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பு பதாகை வைத்தனர்.</p><p>இதனால் அப்பகுதியில் உள்ள கட்சியினர் அப்பகுதி மக்களிடத்தில் எவ்வாறு வாக்குகளை பெறுவது என்று குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில் இன்று அந்தப் பகுதியில் உள்ள பல வீடுகளில் கருப்பு கொடியை கட்டியுள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், இப்பகுதி மக்கள் கருப்பு கொடியை தங்களது வீடுகளில் கட்டியுள்ளதாக அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அரசியல் கட்சிகள் அங்கு சென்று எப்படி வாக்கு கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. </p>
