<p>வேலூர்: குடியாத்தத்தில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.6.85 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.</p><p>தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், தேர்தல் நடத்தை விதிகளும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லட்சுமணபுரம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.6.85 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காரில் பயணம் செய்தவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்தது. மேலும், அவர் புதிதாக வீடு கட்டியுள்ள நிலையில், விசேஷத்திற்காக காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவைகள் வாங்க பணம் எடுத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.85 லட்சம் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. </p>
