<p>அரியலூர்: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி செல்ஃபியுடன் கையொப்பமிட்டு, உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். </p><p>இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகை ஏந்தியவாறு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். </p><p>இதேபோல் சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஜெயங்கொண்டம் நகராட்சி தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.</p><p>ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் வாக்களிப்பது நமது கடமை, வாக்களிப்பது நமது உரிமை, ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் பேரணியாக சென்றனர்.</p>
