<p>திருப்பத்தூர்: திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக தான் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு என அதிமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. </p><p>இந்த நிலையில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை முன்பு, அதிமுக தொண்டர் ஒருவர் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, திருப்பத்தூர் தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இல்லையெனில் அதே இடத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும், கட்சியினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சத்தியம் செய்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவேன் எனவும் தெரிவித்தார்.</p>
