<p>கோயம்புத்தூர்: அனைத்து ஆவணங்களை காட்டியும் மீன் வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. </p><p>நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமன் மற்றும் அவரது நண்பர். இவர்கள் இருவரும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மீன் வியாபாரத்திற்காக 80 ஆயிரம் ரூபாய்க்கு நகைகளை அடகு வைத்து மீன்களைக் கொள்முதல் செய்தனர். </p><p>இதையடுத்து மீன்களை வாங்கி வேளாங்கண்ணியில் இருந்து கேரளாவில் சாவக்காடு மற்றும் குன்னங்குளம் ஆகிய பகுதிகளில் விற்று விட்டு, அதற்குரிய ஆவணங்கள் மற்றும் வியாபாரத்திற்காக நகைகளை அடகு வைத்த ரசீது மற்றும் மீன்களை விற்பனை செய்த 70 ஆயிரம் ரூபாயுடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.</p><p>அப்போது, அவர்கள் வந்த வாகனத்தை பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வியாபாரிகள் இருவரும் மீன் வியாபாரம் செய்த பணம் ரூ.70,000 உள்ளதாகவும் அதற்கு உண்டான ரசீதுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.</p>
