<p>தேனி: கம்பம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து நடிகர் பொன்னம்பலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><p>கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவை ஆதரித்து, நேற்று (ஏப்.10) நடிகர் பொன்னம்பலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>பிரச்சாரத்தில் பேசிய அவர், “மக்களுக்கு சேவை செய்யவே தளபதி விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய்க்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. 'தீய சக்தி' என்று நாம் யாரைச் சொல்கிறோமோ, அந்த சக்தியை உருவாக்கியதே நாம்தான். மக்கள் பேராற்றல் கொண்டவர்கள். அந்த சக்தியை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியாமல், கடந்த முறை நாம் செய்த தவறுதான், தீய சக்திகள் உருவாக காரணம்.</p><p>இனியாவது நல்ல சக்தியிடம் மக்கள் தங்கள் வாக்குகளை ஒப்படைக்க வேண்டும். நாம் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காகவே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி, கம்பம் தொகுதியில் ஜெகநாத் மிஸ்ரா வேட்பாளராக களம் காண்கிறார்.</p><p>மேலும், என்னை அடையாளப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த். 'பணம், பணம் என்று அலைகிறீர்களே... வாழ்க்கையில் எதை எடுத்துச் செல்லப் போகிறீர்கள்?' என அவர் எப்போதும் கேட்பார். ஆனால், இன்று பிரேமலதா விஜயகாந்த், திமுக என்னும் தீய சக்தியுடன் கூட்டணி வைத்துள்ளார். இது அவர்களுக்கு வெற்றியை தராது. மாறாக, திமுகவுடன் இணைந்ததால், திமுக 'தீய்ந்து போன சக்தியாக' மாறப்போகிறது” என விமர்சித்தார்.</p>
