<p>காஞ்சிபுரம்: விஜய் ஒரு நாள் பிரச்சாரம் செய்து விட்டு நான்கு நாட்கள் ஓய்வெடுக்கிறார். இவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் பேருந்து நிலையம் பகுதியில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரச்சாரம் செய்தார். அப்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். </p><p>பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "நெல்லுக்கான ஊக்கதொகை விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது பச்சப் பொய். அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என வேளாண் துறை அமைச்சரோ அல்லது மோடியோ சொல்லட்டும். </p><p>நடிகர் விஜய் எடப்பாடிக்கு B டீமாக செயல்படுகிறார். இதனால் தான் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் வாபஸ் வாங்கி விட்டார். எப்படியாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பல்வேறு சூழ்ச்சியில் இதுவும் ஒன்று. விஜய் ஆட்சிக்கு வருவதை விட முதலில் தேர்தல் களத்திற்கு வரட்டும். ஒரு நாள் பிரச்சாரம் செய்து நான்கு நாள் ஓய்வெடுக்கிறார். இவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்?" என ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பினார். </p>
