<p>தஞ்சாவூர்: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் கருப்புக் கொடி போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். </p><p>கும்பகோணம் பகுதியில் உள்ள தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். </p><p>அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்த மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்படும், நிதி பகிர்வு குறையும், மேலும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்கு தான் இந்த தண்டனையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. </p><p>50 சதவீத இடங்கள் அதிகரிப்பு எனில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுடன் வெறும் 20 மட்டுமே உயர்ந்து 59 ஆகும். ஆனால் வடமாநிலங்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 80 ஆக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இனி 140 ஆக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. </p><p>எனவே இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் கருப்பு கொடி போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும், மேலும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து போராடும்” என தெரிவித்தார்.</p>
