<p>காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தேநீர் கடையில் டீ குடிக்க வந்தவர்களுக்கு வடை சுட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள சூழலில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதற்காக பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.</p><p>அந்த வரிசையில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் நித்யா சுகுமாரும், அவரது தொகுதியில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.</p><p>அந்த வகையில், இன்று காலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா காவல் அரங்கம் விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு, அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.</p><p>தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள தேநீர்க்கடையில் வடை சுட்டுக் கொடுத்தும், இளநீர் கடையில் இளநீரை வெட்டி கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.</p>
