<p>தூத்துக்குடி: நான்கு முனை போட்டி குறித்து பதிலளித்த இயக்குநர் மாரி செல்வராஜ், "ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. வாக்கு என்பது விளையாட்டு காரியம் இல்லை" என்று பதிலளித்தார்.</p><p>2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்றைய (ஏப்ரல் 23) தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 3 மணி நேர நிலவரப்படி 70 சதவீதத்தைக் கடந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.</p><p>பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களின் வாக்கைச் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது சொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட புளியங்குளம் அரசு துவக்க பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.</p><p>வாக்கு செலுத்துவதற்காக வந்த மாரி செல்வராஜை கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்று, நலம் விசாரித்தனர். வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இயக்குநர் மாரி செல்வராஜிடம் தமிழகத்தில் நிலவும் நான்கு முனை போட்டிகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.</p><p>அதற்கு பதிலளித்த அவர், "எத்தனை முனை போட்டி நிலவினாலும், யார் வர வேண்டும், யார் வரக் கூடாது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. வாக்கு என்பது விளையாட்டு காரியம் இல்லை. வாக்கு என்பது, நம்முடைய தலைமுறையை, சித்தாந்தத்தை நினைவில் வைத்து அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்" என்றார்.</p><p>முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கும் போது, தனது சொந்த தொகுதி ஸ்ரீவைகுண்டம் என்று கூறியபடி, ஸ்ரீவைகுண்டம் தானா என்று தன் அருகில் இருந்தவர்களிடம் மாரி செல்வராஜ் சந்தேகத்துடன் கேட்டார். </p><p>2026 தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித்குமார் தன்னுடைய வாக்கைச் செலுத்தினார். இதற்காக அவர் நேற்று துபாயில் இருந்து சென்னை வந்திருந்தார். இதே போல், நடிகர்கள் ரஜினிகாந்த், சிம்பு, சூர்யா, ஜோதிகா, கமலஹாசன், ஸ்ருதிஹாசன், குஷ்பு, திரிஷா என சினிமாத் துறையைச் சார்ந்த பலரும் தங்களின் வாக்குகளைப் பதிவுச் செய்துள்ளனர்.</p>
