<p>சென்னை: பல்லாவரம் அருகே திருமண முடிந்த கையோடு மணகோலத்தில் தம்பதியினர் வாக்களித்தனர்</p><p>பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார், புவனேஸ்வரி. முதுகலை பட்டதாரிகள் இருவருக்கும் இன்று காலை பொழிச்சலூரில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது. </p><p>இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்று வருவதை முன்னிட்டு, திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் கழுத்தில் மாலையுடன் சென்று வாக்களித்தனர். புதுமண தம்பதி பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை ஆற்றினர்.</p><p>பட்டதாரி தம்பதியினர் இருவரும் திருமணக் கோலத்தில் வாக்குப்பதிவு செய்தது மற்ற வாக்காளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தினேஷ்குமார் கூறுகையில், “நானும், எனது மனைவியும் முதல்முறையாக வாக்களிக்கிறோம். இந்த தருணம் புதுமையாக உள்ளது, அனைத்து வாக்காளர்களும் தனது வாக்கினை பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.</p><p>தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இன்று மதியம் 3 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 70% வாக்குகள் பதிவாகின. </p>
