<p>வேலூர்: குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பீச்சி அடித்ததால், சர்வீஸ் சலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.</p><p>வேலூர் மாவட்டம் அலமேலு ரங்காபுரம் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களுக்கு குடிநீர் விநியோக குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் முக்கிய பைப் லைன் ஒன்று செல்கிறது.</p><p>இந்த நிலையில், ரங்காபுரம் பகுதியிலிருந்த குடிநீர் விநியோக குழாயின் பைப் திடீரென உடைந்துள்ளது. அதன் காரணமாக, சுமார் 10 அடி உயரம் வரை சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீர், சர்வீஸ் சாலையில் வீணாக ஓடியது. அதனால், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.</p><p>மேலும், குடிநீர் விநியோக குழாய் உடைப்பால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல, குழாய் உடைந்துள்ள இடத்திற்கு அருகில் மின்கம்பம் இருப்பதால், தண்ணீர் அதன் மீது பட்டு மின்சாரம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.</p><p>ஆகையால், பெரும் விபத்து நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, குழாய் பழுதை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
