<p>திண்டுக்கல்: கொடைக்கானலில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்</p><p>சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கடந்த சனிக்கிழமை வந்தடைந்தார். இதனையடுத்து, இன்று இரண்டாவது நாளாக அப்சர்வேட்டரி அடுத்துள்ள வனப்பகுதி அருகே, நகராட்சி கட்டுப்பாட்டில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தை சுற்றி, நடைபயிற்சி மேற்கொண்டார். </p><p>நடைபயிற்சியை முடித்துவிட்டு சாலைக்கு வந்த முதலமைச்சரை திமுக தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்து பூங்கொத்து கொடுத்து, கைகளை குலுக்கி வரவேற்றனர். பின்னர் வாகனத்தில் அமர்ந்தபடியே பொதுமக்களையும், தொண்டர்களையும் பார்த்து நலம் விசாரித்து கொண்டே தங்கும் விடுதிக்கு அவர் திரும்பினார். மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்ட பகுதிகளிலும், அவரது வாகனம் செல்லும் சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.</p><p>தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று, ஓய்வெடுத்து வருகின்றனர். வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு அதற்கு முன்னதாக சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>
