<p>அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு அதிகாரிகள் பணிகளைப் புறக்கணித்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.</p><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் இன்று எள் 1,000 மூட்டைகள், கடலை 1,000 முட்டைகள் கொண்டு வந்த நிலையில் கொள்முதல் செய்ய வியாபாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>இதனால் விவசாயிகள் கொண்டு வந்த விளை பொருட்கள் கடந்த மூன்று நாட்களாக தேக்கமடைந்துள்ளதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.</p><p>இதனைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஜெயங்கொண்டம் - திருச்சி -சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு முன்பாக திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். </p><p>மேலும் இது குறித்து அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>
