<p>தூத்துக்குடி: மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் காவலர்கள் கண்ணயர்ந்து தூங்கிய நேரத்தில் விசாரணைக் கைதி தப்பியோடியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீஸார், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணைக் கைதியான, பன்னம்பாறையைச் சேர்ந்த தமிழரசன் (22) என்பவரை, கைது செய்து காவல் நிலையத்தில் உள்ள கைதிகள் அறையில் அடைத்து வைத்திருந்தனர். </p><p>அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கண்ணயர்ந்து தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட விசாரணைக் கைதி தமிழரசன், அறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதை அறியாத காவல் அதிகாரிகள், விசாரணைக்காக தமிழரசனை அழைத்து செல்வதற்காக வந்திருக்கின்றனர். அப்போது கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும், கைதியும் தப்பியோடியது அப்போதே அவர்களுக்கு தெரிய வந்தது.</p><p>இதையடுத்து, போலீஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தப்பியோடிய தமிழரசனை தேடி வருகின்றனர். மேலும், எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், ஒட்டுமொத்த காவல் நிலையமும் தற்போது பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது. விசாரணை கைதி தப்பி ஓடிய இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>
