<p>சென்னை: சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>சென்னை, ஓஎம்ஆர் சாலை, சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கத்தில் இயங்கிவரும் பிரபல ஐடி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமான இந்த ஐடி வளாகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.</p><p>இதனால், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடியுள்ளனர். மேலும், தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், ஐடி ஊழியர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், தீயை அணைக்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.</p><p>அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுக்க பரபரப்புடன் காணப்பட்டது. மின் கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
