<p>திண்டுக்கல்: கொடைக்கானல் 63-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். </p><p>மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் வருடந்தோறும் மே மாதம் மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் மலர் கண்காட்சியை பிரையண்ட் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.</p><p>அங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, 10 ஆயிரம் மலர் பூந்தொட்டிகள், 30 ஆயிரம் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாம்பன் பாலம், 6 ஆயிரம் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட தஞ்சை கோபுரம், 2 ஆயிரம் மலர்களை கொண்ட தமிழரின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு, திண்டுக்கல் பூட்டு, மலர் வளையங்கள் என அனைத்து தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.</p><p>இதுமட்டுமின்றி, தோட்டக்கலை துறை சார்பாக காய் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி, சின்னாளப்பட்டி சுங்குடி சேலை, காய்கறி மாலை, திண்டுக்கல் மலைக்கோட்டை, திண்டுக்கல் பிரியாணி, மணிமுத்தாறு நீர் தேக்கம் மற்றும் தேசிய பறவையான மயில் போன்றவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண மலர்களுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.</p>
