<p>அரியலூர்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை நாங்கள் பெற்ற கடனை கட்டுவதாக இல்லை என விவசாயிகள் அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 26) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். </p><p>அதில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி முறையாக அறிவிக்கபடவில்லை என்றும், பாரபட்சமாக அறிவித்து உள்ளதாக விமர்சித்த விவசாயிகள் கண்களில் கருப்புத் துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். </p><p>இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.விஸ்வநாதன் பேசுகையில், ” பாரபட்சமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடியை விவாசாயிகள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வாக்குறுதியில் அறிவித்தபடி, முறையாக பயிர்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் பெற்ற கடனை திரும்பி செலுத்த மாட்டோம், எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக பெரும் போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார். </p>
