<p>திருநெல்வேலி: 4,500 விவசாயிகளுக்கு ரூ.82 கோடி நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது, இதனை பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்தார். </p><p>நெல்லையில் கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அருகே காரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்டோபர் மற்றும் நாராயணன் ஆகியோர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். தொடர்ந்து தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும், முதல் கட்டமாக 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இதன் மூலம் 16,265 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.</p><p>இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 47 அடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. தென்மேற்கு பருவமழை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நான்கு கால்வாய்களின் கீழ் உள்ள 16,265 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன.</p><p>முதற்கட்டமாக 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒருவேளை வரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் இந்த மாத இறுதி வரை வழங்குவதற்கு மட்டுமே நம்மிடம் நீர் இருப்பு உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்த வேண்டும்" என்றார்.</p><p>மேலும், "நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,500 விவசாயிகளுக்கு ரூ.82 கோடி நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது. இது குறித்து அரசிடம் உடனடியாக பேசி விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தாமிரபரணி ஆற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. முந்தைய நிர்வாகம் எடுத்த அனைத்து நல்ல முயற்சிகளும் தடையின்றித் தொடரும்" என்றார்.</p>
