<p>கோயம்புத்தூர்: அதிமுகவை சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் இரங்கல் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி நோக்கி அதிமுக தொண்டர் ஒருவர் துரோகி என கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் வாசித்து வருபவர் பொள்ளாச்சி ஜெயராமன். முன்னாள் துணை சபாநாயகரான இவர் பொள்ளாச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரின் தாயார் வயது மூப்பு காரணமாக கடந்த மே 15 ஆம் தேதி இயற்கை எய்தினார்.</p><p>இதை அடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகை தந்தார். அப்போது அங்கு கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கத்தினார். இதனால் கோபம் அடைந்த ஜெயராமன் அந்த நிர்வாகியை கடுமையாக சாடினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. </p><p>தற்போது அந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி ஜெயராமனின் தாயாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p>
