<p>தேனி: வைகை அணை நீர்த்தேக்க பகுதிகளில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.</p><p>தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில மாதங்களாகவே நீர்வரத்து இன்றி அணையின் நீர்மட்டம் குறைந்து தற்போது 20 அடி வரை சரிந்துள்ளது. இந்நிலையில் வைகை அணையின் தண்ணீர் மாசடைந்து குடிநீருக்கு உகந்ததல்ல என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தேனி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் வைகை அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வைகை அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஆக்சிஜன் அளவு குறைந்து ஆங்காங்கே மீன்கள் செத்து தண்ணீரில் மிதந்து வருகின்றன. இதனால் வைகை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.</p><p>20 அடிவரை நீர்மட்டம் குறைந்த நிலையில் சேறும் சகதியுமாக வறண்ட பாலைவனம் போல் மாறி இருக்கும் அணையில் தற்போது மீன்களும் செத்து மிதப்பதால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 21.59 அடியாகவும் அணையின் இருப்பு 130 மில்லியன் கன அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 24 கன அடியாக உள்ளது.</p><p>தென்மேற்குப் பருவமழை பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். எனவே வைகை அணையில் செத்து மிதக்கும் மீன்களை அணையின் நீர் தேக்கப் பகுதிகளிலிருந்து அகற்றப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
