<p>தேனி: தேவதானப்பட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் திருக்கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.</p><p>தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் முடிவு பெற்றதை அடுத்து இன்று (ஜூன் 7) கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. </p><p>முன்னதாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் உள்ள யாக குண்டங்களில் வேத மந்திரங்கள் முழங்க பலவித மூலிகைப் பொருட்கள் கொண்டு யாகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டது. </p><p>மேலும், பூஜிக்கப்பட்ட கலச நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு மேளம், நாதஸ்வரம் முழங்க கோயில் வளாகத்தை சுற்றி வந்து கொடி மரத்திற்கு புனித கலச நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்தனர். ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ நந்திகேஸ்வரர், ஸ்ரீ நால்வர் தெய்வங்களின் சன்னதிகளிலும் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது</p><p>இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பல்வேறு ஆதீனங்களை சேர்ந்த சுவாமிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆசி வழங்கினர். இதில் தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.</p>
