<p>சென்னை: ஆளுநர் மாளிகை நடைபெற்ற விழாவில் காவி உடையில் திருவள்ளுவர் உருவப்படம் வைக்கப்பட்டதை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற புகைப்படக் கலைஞர் ராஜாவின் மகள் சினேகா மற்றும் மணமகன் அபிஷேக் திருமணத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”காவி உடையில் திருவள்ளுவரை காட்சிப்படுத்தி, அவரை ஒரு சனாதனி என்று கூறிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநரை ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். </p><p>பனகல் மாளிகைக்கு எதிரே மதிமுக தொண்டர்கள் திரள உள்ளனர். அங்கிருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காகக் கருப்புக்கொடிகளுடன் எங்களது கருஞ்சட்டைப்படை புறப்பட்டுச் செல்லும். இந்த ஜனநாயகக் கடமையை எந்தவொரு அமளிக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான வழியில் ஆற்றுவோம்” என தெரிவித்துள்ளார். </p><p>தமிழகத்தில் சட்ட ஒழுங்கு ரொம்ப காலமாகவே சீர்கெட்டுப் போய்விட்டது என்று விமர்சித்த அவர், விலகிச் சென்றவர்களின் உளறல்களுக்கெல்லாம் வைகோ பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.</p>
