<p>மயிலாடுதுறை: திருவிடைக்கழி முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.</p><p>தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ளது திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில். இங்கு சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே கருவறையில் எழுந்தருளி உள்ளதால், முருகபெருமான் சிவ சொரூபமாக காட்சி அளிக்கிறார். </p><p>சிறப்புமிக்க இக்கோயிலில் வைகாசி சதய திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆறாம் திருநாளான இன்று, முருகப்பெருமான இரண்யாசூரணை வதம் செய்யும் புராண வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. </p><p>இதனை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மூலவராக உள்ள முருக பெருமானிடம் வேல் வாங்கி வந்து உற்சவராக உள்ள அகிலாண்டேஸ்வரி அம்பாளிடம் கொடுத்து, அங்கிருந்து புறப்பட்டு மாலை தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்று அங்கு சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் அருள்பாலித்தார்.</p><p>தொடர்ந்து, தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயிலில் உள்ள மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் கடற்கரையில் மீன் வடிவில் இருந்த இரண்யாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. </p><p>அப்போது மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தினர், சீர் வரிசை எடுத்துவந்து முருகனுக்கு சமர்ப்பித்தனர். தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். </p>
