<p>தூத்துக்குடி: மீன்பிடி தடை காலம் முடிந்து நேற்று கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்களுக்கு ரூ.2 கோடி வரை மீன்கள் விற்பனையானதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p><p>61 நாட்கள் மீன்பிடி தடை காலத்திற்கு பின்பு நேற்று (ஜூன் 15) அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள், இரவு 7 மணிக்கு கரை திரும்பினர். நேற்று மீனவர்களுக்கு அதிகளவில் மீன் பிடிபட்டது.</p><p>இதனையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் வந்து குவிந்ததால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. பாறை மீன் ஒரு கூடை 7 ஆயிரம் ரூபாய் வரையும், முண்டக்கண்ணி, அயிலை உள்ளிட்ட மீன் வகைகள் ஒரு கூடை 5000 ரூபாய் வரையும், நெத்திலி ஒரு கூடை 3,800 ரூபாய் வரையும் விற்பனையானது. </p><p>அதேபோல் சாளை மீன் ஒரு கூடை 2000 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரையும், விளை மீன் ஒரு கூடை 5000 ரூபாய் வரையும், சீலா மீன் கிலோ 800 ரூபாய் வரையும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஒட்டுமொத்தமாக நேற்று ஒரு நாள் மட்டும் 2 கோடி ரூபாய் அளவில் மீன்கள் விற்பனையானதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதேபோன்று தங்களுக்கு மீன் விற்பனை தொழில் சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.</p>
