<p>அரியலூர்: படநிலை கிராமத்தில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.</p><p>அரியலூர் மாவட்டம், படநிலை கிராமத்தில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டி 2 வருடங்கள் ஆகியும், அதில் குடிநீர் இணைப்பு வசதி செய்யாததால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்த சாலை மறியலில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டனர்.</p><p>சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p>
