<p>அரியலூர்: தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அரியலூர் - திருமானூர் ஊராட்சி ஒன்றியம், குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த அவர், கல்வியில் சிறந்து விளங்க மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி ஊக்கப்படுத்தினார். </p><p>பின்னர், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் கற்றல் திறன் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து தனித் தனியாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. </p><p>மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து சிறப்பாக கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு கல்வியே சிறந்த அடித்தளம். வாழ்வில் சிறந்து விளங்க தவறாமல் கல்வி கற்பது அவசியமாகும். </p><p>எனவே, மாணவர்கள் சிறப்பான முறையில் கல்விக் கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது" என தெரிவித்தார்.</p>
