<p>நீலகிரி: கோத்தகிரி - குன்னூர் நெடுஞ்சாலையில் வாகனங்களை வழி மறிக்கும் காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.</p><p>மலை மாவட்டமான நீலகிரி வனவிலங்குகளின் வசிப்பிடமாகத் திகழ்கிறது. இந்த நிலையில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள் தற்போது முல்லூர், தட்டபள்ளம், குஞ்சபானை போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ளன.</p><p>இந்த நிலையில் இன்று காலை கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசு பேருந்தை தட்டபள்ளம் என்னும் இடத்தில் காட்டு யானை ஒன்று வழி மறித்து நின்றது. அதனைக் கண்ட பயணிகள் அச்சமடைந்தனர். ஆனால், அந்த யானை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல், அங்கிருந்து சென்றதால் பயணிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.</p><p>தொடர்ந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் வழிமறித்து நின்றன. இதனை கண்ட வாகன ஓட்டிகள், வாகனங்களை அதே இடத்தில் நிறுத்தினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. தற்போது, இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
