<p>தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியக் கோயிலில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்து அசத்தினர்.</p><p>12வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் உலகப் பிரசித்தி பெற்ற பெரியக்கோயில் ராஜராஜன் கோபுரம் அருகில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி வஜ்ராசனம், பத்மாசனம், புஜங்காசனம், தனுராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்தனர். </p><p>அதேபோல் தஞ்சாவூர் ராஜராஜன் மணி மண்டபத்தில் பள்ளி மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். யோகாசனம் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் உறுதியளிக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு யோகாசனமும், ஒவ்வொரு நோய்களுக்கு தீர்வாக அமைவதால் அனைவரும் யோகா செய்து தங்களது உடல், மன வலிமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.</p><p>சர்வதேச யோகா தினம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, உலகெங்கிலும் உள்ள 210 இந்தியத் தூதரகங்கள் மூலம் சுமார் 2,500 இடங்களில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 190-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளன.</p>
