<p>வேலூர்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை யோகா பயிற்சி மேற்கொண்டனர்.</p><p>சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை வெளிப்பகுதியில் அமைந்துள்ள பூங்காவில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தொல்லியல் துறையின் முதுநிலை பொறுப்பாளர் அகல்யா தலைமை தாங்கினார். </p><p>மேலும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், பாரத் கல்விக் குழும இயக்குநர் இந்திரநாத், தொல்லியல் துறை உதவி பொறியாளர் பரணிதரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று யோகாசனங்களை செய்து காட்டினர். </p><p>அதனைத்தொடர்ந்து யோகா பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படுவதுடன், மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முடியும் என்பதும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோல், யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் தொல்லியல் துறை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. </p>
